இந்தியா
ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடமில்லை: மோடி அமைச்சரவையில் அதிமுக இடம்பெறவில்லை!
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக இன்று பதவியேற்றார்.
வெகு விமரிசையாக கொண்டாடப்படும் இந்த பதவியேற்பு விழாவில் பல நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். பல மாநில முதல்வர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், உலக தலைவர்கள் பலரும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
சரியாக 7 மணிக்கு விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனையடுத்து இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றார். மோடி பதவியேற்ற பின்னர் அவரது அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இந்த அமைச்சரவையில் கூட்டணி கட்சியான அதிமுக இடம்பெறவில்லை. தமிழகத்தில் பாஜக அதிமுக உடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை சந்தித்தது. தேர்தல் நடந்த 39 தொகுதிகளில் பாஜக அதிமுக கூட்டணி 1 தொகுதியில் மட்டும் வென்றது. தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே வெற்றி பெற்றார். பாஜக 5 தொகுதிகளில் போட்டியிட்டு ஐந்திலும் தோல்வியை தழுவியது.
இதனையடுத்து தமிழகத்தில் பாஜக கூட்டணியில் வெற்றிபெற்ற ஒரே நபரான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்காக ஓபிஎஸ் முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ஓபிஎஸ் மகன் மத்திய அமைச்சர் ஆக வாய்ப்பு உள்ளது என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இன்று பதவியேற்ற மோடி அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமளிக்கப்படவில்லை. இதனால் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரின் அமைச்சர் கனவு பலிக்கவில்லை.