தமிழ்நாடு
பத்திரிகையாளரிடம் ஜாதிப் பெயரை கேட்டு சர்ச்சையை ஏற்படுத்திய கிருஷ்ணசாமி!
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இன்று பத்திரிகையாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்தார். இந்த சந்திப்பில் கிருஷ்ணசாமிக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட அவர் கேள்வி கேட்ட பத்திரிகையாளரின் ஜாதிப் பெயரை கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிட்டார். இவர் அங்கு 355870 வாக்குகள் வாங்கினார். ஆனால் இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தனுஷ் எம் குமார் 476156 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
இதனையடுத்து தேர்தல் தோல்விக்கு பின்னர் இன்று முதன்முறையாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் கிருஷ்ணசாமி. இந்த சந்திப்பில் பத்திரிக்கையாளர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தனர். அதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த கிருஷ்ணசாமி சில இடங்களில் ஒருமையிலும், பல கேள்விகளுக்கு கோபமாகவும் பதிலளித்தார்.
ஒரு கட்டத்தில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அவரை பார்த்து கோபமாக நீ என்ன ஊர், என்ன ஜாதி என சர்ச்சைக்குறிய கேள்வியை கேட்டார். இதனால் சக பத்திரிக்கையாளர்கள் கோபமடைய அந்த இடம் பரபரப்பானது.