இந்தியா
மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து!
பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
மொத்தம் தேர்தல் நடைபெற்ற 542 தொகுதிகளில் பாஜக தலைமையிலான கூட்டணி 352 இடங்களில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. ஆட்சி அமைக்க 272 இடங்களில் வெற்றி பெற்றாலே போதுமானது ஆனால் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் இந்த எண்ணிக்கையை தாண்டி முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 90 இடங்களிலும் மற்ற கட்சிகள் 100 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அதாவது கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் கூட ஆட்சி அமைக்க கூடிய நிலையில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
முன்னதாக இலங்கை பிரதமர், ரஷ்ய அதிபர், சீன பிரதமர், ஆப்கானிஸ்தான் பிரதமர், பூட்டான் மன்னர் என பல உலக தலைவர்கள் பிரதமர் மோடிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தனது வாழ்த்துக்களை பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் இம்ரான் கான், பாஜகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் என் வாழ்த்துகள். தெற்காசியாவின் அமைதி, முன்னேற்றம், செழுமைக்காக இணைந்து செயல்படுவோம் என கூறி மோடிக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.