இந்தியா
நாளை வன்முறைக்கு வாய்ப்பு: உளவுத்துறை எச்சரிக்கை!
நாளைய தினம் மக்களவை மற்றும் சில மாநில சட்டசபை தொகுதிகளுக்க நடந்த இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளதையடுத்து நாடுமுழுவதும் ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. இந்நிலையில் நாளைய தினம் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்த 17-வது மக்களவை தேர்தல் கடந்த 19-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தேர்தலுடன் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலின்போது பதிவான வாக்குகள் நாளைய தினம் எண்ணப்பட உள்ளது. முறைகேடுகளைத் தடுக்க வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 856 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 45 மையங்களில் எண்ணப்படவுள்ளன. இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கும் டிஜிபிகளுக்கும் உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், வாக்கு எண்ணிக்கை நாளில் இடையூறு மற்றும் வன்முறை சம்பவங்களை தடுக்க, சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட வாக்கு எண்ணும் மையங்களில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.