தமிழ்நாடு
வாக்கு கணிப்புகளுக்கு பின்னணியில் பாஜக? தமிழிசை விளக்கம்!
17-வது மக்களவைக்கான தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடந்தது. இதன் கடைசி கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனையடுத்து பல்வேறு ஊடகங்கள் வரிசையாக எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்த வாக்கு கணிப்புகள் தான் தற்போது அரசியலிலும் நாடு முழுவதும் முக்கிய பேச்சாக உள்ளது. வாக்கு கணிப்புகள் அனைத்தும் சொல்லி வைத்தார் போல் மத்தியில் பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறுகிறது. ஆனால் அரசியல் வட்டாரத்தில் விசாரித்தால் முடிவுகள் வேறு மாதிரியாக வரும் என கூறுகிறார்கள். இந்த வாக்கு கணிப்புகளுக்கு பின்னணியில் பாஜக உள்ளதாக பொதுவாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்த வாக்கு கணிப்புகள் குறித்து விமர்சித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கருத்துக் கணிப்புகள் முழுமையாக எடுக்கப்படவில்லை. பாஜக கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இவ்வாறு வாக்குக் கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். இது உண்மை நிலவரம் அல்ல. மக்கள் மனநிலை வேறு, வாக்குக் கணிப்பு வேறு. மோடியின் தியானத்துக்குச் சக்தி கொடுப்பதற்கான வாக்குக் கணிப்பே இது என விமர்சித்தார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, வாக்குக் கணிப்புகளுக்குப் பின்னால் பாஜக இருக்கிறது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். வாக்குக் கணிப்புகளை வெளியிட்டது ஊடகங்கள். எனவே, தங்களை யார் இயக்குவது என்று ஊடகங்கள் கூறினால்தான் அதற்கு சரியாக இருக்கும் என விளக்கமளித்தார்.