இந்தியா
புல்வாமாவில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்: ராணுவ வீரர் பலி!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சமீபத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நடத்தியது. இந்நிலையில் மீண்டும் இதே அமைப்பை சேர்ந்தவர்கள் புல்வாமாவில் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள தலிபோரா பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று காலை முதல் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
இந்த கடுமையான துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் அதே நேரத்தில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் பலியானார். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சார்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.