தமிழ்நாடு
மறைந்த கருணாநிதி பச்சைப் பொய் சொன்னார்: எடப்பாடி பழனிசாமி அதிரடி பிரச்சாரம்!
நான்கு தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக உள்ளனர். தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பல கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நான்கு தொகுதிகளில் அரவக்குறிச்சி தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக உள்ளது.
கடந்த முறை திமுக வேட்பாளரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக களமிறங்கி வெற்றிபெற்ற செந்தில் பாலாஜி இந்தமுறை திமுக வேட்பாளராக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இவர் அதிமுகவில் அதிருப்தியில் இருந்து தினகரன் ஆதரவாளராக அமமுகவில் செயல்பட்டு வந்தார். ஆனால் அங்கும் அதிருப்தி காரணமாக விலகி திமுகவில் ஐக்கியமானார். இதனையடுத்து தற்போது திமுக வேட்பாளராக அரவக்குறிச்சியில் போட்டியிடுகிறார் செந்தில் பாலாஜி. இதனால் தற்போது தேர்தல் பிரச்சார களத்தில் அதிமுக, அமமுக ஆகிய இரு கட்சி தலைவர்களாலும் செந்தில் பாலாஜி அதிகமாக, கடுமையாக, காட்டமாக விமர்சிக்கப்படுகிறார்.
இந்நிலையில் நேற்று அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது செந்தில் பாலாஜியை ஒரு பிடிபிடித்துவிட்டார் அவர். செந்தில் பாலாஜி பல்வேறு ஆசை வார்த்தைகளைப் பேசுவார். ஒருவனை ஏமாற்ற வேண்டுமென்றால் அவனிடம் ஆசை வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். ஆசை வார்த்தைகளைச் சொல்லும்போதுதான் ஒருவனை ஏமாற்ற முடியும்.
மக்களை ஆசை வார்த்தைகளால் ஏமாற்றுபவர்தான் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி. மூன்று சென்ட் நிலம் கொடுப்பதாக அவர் சொல்லியிருக்கிறார். விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுப்போம் என்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பச்சைப் பொய் சொன்னார். இதுவரை எத்தனை பேர் இரண்டு ஏக்கர் நிலம் பெற்றிருக்கிறார்கள்? அதேபோலதான் இப்போது ஆசை வார்த்தைகளால் மக்களை ஏமாற்ற திட்டமிடுகின்றனர் என அதிரடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார் எடப்பாடி பழனிசாமி.