தமிழ்நாடு
ஓபிஎஸ் உள்ளிட்ட 70 அதிமுக எம்எல்ஏக்கள் திமுக உடன் தொடர்பு: ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு தகவல்!
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி மே 23-ஆம் தேதிக்கு பின்னர் கவிழுமா, திமுக ஆட்சியை கைப்பற்றுமா என்ற பதற்றம் தமிழக அரசியலை தொற்றிக்கொண்டுள்ளது. இருபது தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் அதனை தமிழக மக்களுக்கு தெளிவாக்கிவிடும்.
இந்நிலையில் அதிமுக ஆட்சியை சபாநாயகர் மூலம் தக்க வைக்க அதிமுக எடுத்து வரும் முயற்சிகள் தமிழக அரசியலில் விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இந்நிலையில் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக திமுக அறிவித்துள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக எம்எல்ஏக்கள் 40 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த சூழ்நிலையில் பிரபல தனியார் தமிழ் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிமுக எம்எல்ஏக்கள் 70 பேர் தங்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்களிக்கும்போது அவர்கள் யார் என்பது தெரியவரும் எனவும். அதில் ஓபிஎஸ், செங்கோட்டையன் உள்ளிட்டவர்களும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.