இந்தியா
கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவியை அதிரடியாக கைது செய்த போலீசார்!
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான வேகப்பந்து வீச்சாளர் ஷமி. இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் அவரது மனைவியை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கும் அவரது மனைவி ஹசினுக்கும் இடையே கடந்த ஆண்டு முதல் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் ஹசின் கடந்த ஆண்டு ஷமி மீது சூதாட்ட புகார், வரதட்சனை புகார், வேறு பெண்களுடன் தொடர்பு என பல புகார்களை தெரிவித்தார். இந்த புகார்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இதில் ஹசிம், ஷமி மீது கூறிய சூதாட்ட புகார் குறித்து விசாரித்து இந்திய கிரிக்கெட் வாரியம் அவர் மீது எந்த குற்றமும் இல்லை என கூறி அவரை உலகக் கோப்பை தொடருக்கும் தேர்வு செய்தது. மற்ற அனைத்து வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ஷமியின் மனைவி ஹசின் நேற்று இரவு ஷமியின் வீட்டுக்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
ஷமியின் மனைவி ஹசின் தற்போது அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார், இவர் நேற்று இரவு திடீரென ஷமியின் வீட்டிற்கு சென்று அவரது தாய், சகோதரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துமீறி வீட்டிற்குள் நுழையவும் முயற்சி செய்திருக்கிறார். இதனையடுத்து ஷமியின் தாய் காவல்துறைக்கு போன் செய்து புகார் அளித்துள்ளார். உடனே விரைந்து வந்த போலீசார் ஷமியின் மனைவி ஹசின்னை கைது செய்தனர். இதனால் அங்கி சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.