தமிழ்நாடு
திசை மாறும் ஃபானி புயல்: தமிழகத்துக்கு மழை கிடையாது!
ஃபானி புயல் திசை மாறி செல்வதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட தமிழகத்துக்கு பெரிய அளவில் மழை பொழிவதற்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 25-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுபெற்று புயலாக உருவெடுத்தது. ஃபானி என பெயரிடப்பட்ட இந்த புயல் நேற்று இரவு 11.30 மணி அளவில் சென்னைக்கு தென்கிழக்கே 890 கி.மீ தொலைவில் நிலைகொண்டது. அதிதீவிர புயலாக வலுப்பெறும் இந்த புயல் மேலும் வடமேற்கு திசை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ஃபானி புயலானது வரும் 30 மற்றும் மே 1-ஆம் தேதியன்று வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் 300 கி.மீ. தொலைவு வரை வரக்கூடும். அதன்பின்னர் திசை மாறி வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகரக்கூடும். எனவே, தமிழக கடற்கரையைக் கடக்க வாய்ப்பில்லை. புயல் நெருங்கும்போது வடதமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார்.
பானி புயல் வடகிழக்கு திசை நோக்கிச் சென்றால், மே 3-ஆம் தேதிக்குப் பின்னர் தமிழகத்தில் அதிகளவில் நிலக்காற்று வீசும். இதனால் மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் 2 முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என பாலச்சந்திரன் தெரிவித்தார்.