செய்திகள்
அடுத்த ஆண்டு முதல் டீசல் கார் உற்பத்தியை நிறுத்துகிறோம்; மாருதி சுசூகி அதிரடி!
இந்தியாவின் மிகப் பெரிய பட்ஜெட் கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா 2020 ஏப்ரல் 1 முதல் டீசல் கார் உற்பத்தியை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. மாருதியின் இந்த டீசல் கார் விற்பனை நிறுத்தம் குறித்த அறிவிப்பு இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 2030-ம் ஆண்டுக்குள் இந்தியச் சாலைகளில் உள்ள வாகனங்களில் 30 சதவீதம் எலக்ட்ரிக்காக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. அதன் ஒரு கட்டமாகவே இந்த டீசல் கார் உற்பத்தியை நிறுத்தும் முடிவு என்றும் கூறப்படுகிறது. 2018-2019 நிதி ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4-ம் காலாண்டில் மாருதி சுசூகி 4,58,479 வாகனங்களை விற்றுள்ளது. அதில் உள்நாட்டுச் சந்தையில் விற்கப்பட்ட கார்களின் எண்ணிக்கை 4,21,383 என மாருதி சுசூகி தெரிவித்துள்ளது. இலகு ரக வாகன பிரிவில் 7,480 வாகனங்களை மாருதி விற்றுள்ளது. ஏற்றுமதியில் 29,616 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 4 முதல் 8 சதவீத அளவில் விற்பனையில் வளர்ச்சி அடைய வேண்டும் என்று மாருதி சுசூகி இலக்கு நிர்ணைத்துள்ளது. |