தமிழ்நாடு
உருவாகிறது ஃபானி புயல்: 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை!
இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று இன்று உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். மேலும் அது வலுப்பெற்று வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து புயலாக மாற வாய்ப்புள்ளது.
அப்படி புயலாக மாறினால் அதற்கு ஃபானி எனப் பெயரிடப்படும். இந்த புயல் வரும் 30-ஆம் தேதி தமிழகத்தில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும், கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்.
இதனால் நாளை முதல் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது வானிலை ஆய்வு மையம். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சில பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது.