வணிகம்
ஜெட் ஏர்வேஸ் விமான நேரத்தைப் போட்டி நிறுவனங்களுக்கு வழங்கிய விமான போக்குவரத்துத் துறை!
ஜெட் ஏர்வேஸ் நிதி சிக்கலில் சிக்கி தற்காலிகமாகச் செயல்படாமல் உள்ளது.
இதனால் விமான பயணிகள் மிகப் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளனர். எனவே ஜெட் ஏர்வேஸ்க்கு வழங்கியிருந்த விமான பயண நேரங்களைப் போட்டி நிறுவனங்களுக்கு வழங்க விமான போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது,
நட்டம் மற்றும் கடனால் நிதி சிக்கலில் உள்ள ஜெட் ஏர்வேஸ் தங்களிடம் உள்ள 75 சதவீத பங்குகளை விற்று மீண்டும் சேவையைத் தொடங்கும் பணிகளில் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் விமான ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள் ஆங்காங்கே ஊர் திரும்ப முடியாமல் உள்ளனர். ஜனவரி மாதம் முதல் சம்பளம் அளிக்கப்படாததால் ஊழியர்களிடம் பணமில்லை என்று கூறப்படுகிறது.
வெளியூரில் உள்ள ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் மீண்டும் நாடு திரும்ப ஏர் ஏசியா, இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் உதவி செய்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.