தமிழ்நாடு
எச்.ராஜாவின் திமிர் பேச்சு: பழசை கிளறும் தினகரன்!
தமிழக பாஜகவில் தேசிய செயலாளர் எச்.ராஜா அடிக்கடி சர்ச்சைக்குறிய வகையில் பேசுபவர். அவரது பழைய சர்ச்சைக்குறிய பேச்சு ஒன்றை அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டு பிரச்சாரம் செய்துள்ளார்.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். கரூர் மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் என்.தங்கவேலை ஆதரித்து டிடிவி தினகரன் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது, எச்.ராஜாவிடம் கஜா புயல் பாதிப்பின்போது பிரதமர் மோடி ஏன் வரவில்லை என்று கேட்டால் தமிழக மக்கள் மோடிக்கு எங்கே வாக்களித்தார்கள் என்று சொன்னது நமக்கெல்லாம் நினைவில் இருக்கிறது. அந்த அளவுக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் திமிராக பேசுகிறார்கள் என குறிப்பிட்டார்.
எச்.ராஜா தற்போது சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரது பழைய பேச்சை தினகரன் குறிப்பிட்டு பேசியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. எச்.ராஜா கூறிய அந்த கருத்து தற்போதைய சூழ்நிலையில் கூறப்பட்டிருந்தால் அது நிச்சயமாக தேர்தலில் எதிரொலித்து கூட்டணிக்கே ஆபத்தாகி முடியும்.
ஆனால் அதனை இப்பொழுது தினகரன் கூறி பிரச்சாரம் செய்வது நல்ல முயற்சியே. இது தேர்தலில் பிரதிபலிக்குமா என்பது தேர்தல் முடிவுக்கு பின்னரே தெரியவரும்.