தமிழ்நாடு
18 தொகுதிகளில் தேர்தலை நிறுத்த ஆளும் கட்சி திட்டம்: தினகரன் பரபரப்பு பேட்டி!
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தலோடு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனுக்களையும் தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.
இந்த 18 சட்டபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் அதிரடி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புக்கள் உள்ளது. இதனால் இந்த தேர்தலை தமிழக அரசியல் கட்சிகள் மிகவும் கவனமுடன் எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்த 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நிறுத்த ஆளும் அதிமுக முயற்சி செய்வதாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி தனித் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராமசாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இந்தத் தேர்தலில் அவர்கள் டெபாசிட் இழக்க நேரிடும். உளவுத்துறை மற்றும் காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு சாதிக்கலாம் என நினைக்கிறார்கள்.
அமமுக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்குச் சொந்தமான இடங்களில் பண மூட்டைகளை வைத்து சிக்கவைக்க சதித்திட்டம் தீட்டுகின்றனர். இவர்களின் நோக்கம் 18 சட்டமன்ற இடைத் தேர்தலை நடைபெறவிடாமல் செய்ய வேண்டும். அதற்காக, எத்தகைய செயலிலும் ஆளும் கட்சியினர் ஈடுபடுவார்கள் என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.