தமிழ்நாடு
ஓபிஎஸ் மகனின் வேட்புமனு ரத்தாகுமா? ரூ.3 கோடி சொத்தை மறைத்துவிட்டதாக புகார்!
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ரூபாய் மூன்று கோடி மதிப்பிலான சொத்தை வேட்பு மனுவில் மறைத்துள்ளதாக அறப்போர் இயக்கம் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. எனவே அவரது வேட்புமனுவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மக்களவை தேர்தலையொட்டி தேனி மக்களவை தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இவர் தவறான சொத்து விவரங்களை வேட்பு மனுவில் பதிவிட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பால் தேவ் மற்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு இந்த புகாரை அனுப்பியுள்ளனர் அறப்போர் இயக்கத்தினர்.
அந்த புகாரில், 4 கோடியே 16 லட்சத்து 27 ஆயிரத்து 224 ரூபாய் என்று எழுதியுள்ள விவரத்துக்கான அட்டவணைப் பட்டியலில் ஒரு கோடியே 35 லட்சத்து 30 ஆயிரத்து 394 ரூபாய் வரை மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்று கோடிக்கான கணக்கு பட்டியல் எங்கே? இதில் வேடிக்கையாக இந்த ஒரு கோடி ரூபாய் விவசாயத்தில் இருந்து வந்த வருமானமாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. எனவே உடனடியாக இந்த புகார் மீது விசாரணை நடத்தி ரவீந்திரநாத் குமாரின் வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரை எதிர்த்து அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் உள்ளார். ஒருவேளை ஓபிஎஸ் மகனின் வேட்புமனு ரத்து செய்யப்பட்டால் தங்க தமிழ்செல்வனின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. தற்போது உள்ள சூழலில் கூட தங்க தமிழ்செல்வன் ஓபிஎஸ் மகனுக்கு கடும் சவாலாக உள்ளார். அவரே தேனியில் வெற்றிபெறுவார் என பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.