தமிழ்நாடு
நான் பனங்காட்டு நரி: தூத்துக்குடியில் கொக்கரிக்கும் தமிழிசை!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் முக்கியமான தொகுதிகளில் தூத்துக்குடி தொகுதி ஒன்றாக கருதப்படுகிறது. தூத்துக்குடி முக்கிய தொகுதியாக மாற காரணம் அங்கு போட்டியிடும் வேட்பாளர்கள்தான்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலை திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் சந்திக்கிறது. திமுக கூட்டணி சார்பாக தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி போட்டியிடுகிறார்.
அதே நேரத்தில் அதிமுக கூட்டணி சார்பாக தூத்துக்குடியில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிடுகிறார். மக்களுக்கு மிகவும் அறிமுகமான, பிரபலமான வேட்பாளர்கள் இருவரும் தூத்துக்குடியில் நேருக்கு நேர் மோதுவதால் இந்த தொகுதி ஸ்டார் தொகுதியாக பார்க்கப்படுகிறது. இதனையடுத்து இரு கட்சியினரும் தூத்துக்குடியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டியில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழிசை சௌந்தர்ராஜன், என்னை பற்றிய விமர்சனங்களுக்கு நான் அஞ்ச மாட்டேன், நான் பனங்காட்டு நரி, கனிமொழி இறக்குமதி செய்யப்பட்டவர், நான் இந்த மண்ணின் சொந்தக்காரி என ஆவேசமாக பேசியுள்ளார்.