வணிகம்
சென்னையில் தொழில் வரி உயர்வு இப்போதைக்கு வராது!
சென்னை: தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தால் மட்டுமே தொழில் வரி உயர்வு நடைமுறைக்கு வரும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை, மாதம் ரூ. 21,000க்கு மேல் சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு தொழில் வரி (Professional Tax) 35% வரை அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த வரி ஆண்டு இருமுறை வசூலிக்கப்படும்.
புதிய வரி திட்டத்தின் படி:
மாதம் ரூ. 21,000 முதல் ரூ. 30,000 வரை சம்பாதிக்கும் நபர்களுக்கு வரி ரூ. 135ல் இருந்து ரூ. 185 ஆக அதிகரிக்கப்படும்.
மாதம் ரூ. 30,000 முதல் ரூ. 45,000 வரை சம்பாதிக்கும் நபர்களுக்கு வரி ரூ. 315ல் இருந்து ரூ. 430 ஆக அதிகரிக்கப்படும்.
மாதம் ரூ. 45,000 முதல் ரூ. 60,000 வரை சம்பாதிக்கும் நபர்களுக்கு வரி ரூ. 690ல் இருந்து ரூ. 930 ஆக அதிகரிக்கப்படும்.
இந்த தீர்மானம் பல்வேறு நிலைகளில் உள்ள ஊழியர்களின் வரி சுமையை அதிகரிக்கும் என்பதால், அவர்கள் மத்தியில் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய வரி மாற்றங்கள் சென்னையின் தொழில்முனைவர் சமூகத்தை எப்படி பாதிக்கும் என்பது ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இநிலையில் இந்த தொழில் வரி உயர்வு இப்போதைக்கு வராது. தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தால் மட்டுமே வரும். சென்னை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் தொழில் வரி உயர்வை தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தொழில் வரி என்றால் என்ன?
தொழில் வரி என்பது இந்திய மாநிலங்களில் சில உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் ஒரு மறைமுக வரியாகும். இந்த வரி அரசு அல்லது தனியார் துறை நிறுவனங்களில் வேலை செய்யும் தனிநபர் அல்லது தொழில் முறை நிபுணர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொழில் அல்லது வணிக நிறுவனங்களை நடத்தி வரும் தனிநபர்களுக்கு விதிக்கப்படும் வரியாகும்.
எதற்காக தொழில் வரி வசூலிக்கப்படுகிறது?
தொழில் வரி வரியானது பல்வேறு மாநிலங்களின் வருவாய்க்கு ஆதாரமாக உள்ளது. இந்த வரி மூலம் திரட்டப்படும் வருவாய், வேலைவாய்ப்பு உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மாநில அரசுகளால் பயன்படுத்தப்படுகிறது.