தமிழ்நாடு
மதுரையில் சிக்கியது கண்டெய்னர்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது முதல் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு பணம் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிட்டம்பட்டி டோல்கேட் அருகே மதுரையில் இருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்றை சோதனை செய்தனர். அதில் 6 பெட்டிகளில் நகைகள் இருந்துள்ளன. உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்றதால் அதனை பறிமுதல் செய்து, சீல் வைக்கப்பட்டு கண்டெய்னர் லாரியை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இந்த நகைகளுடன் ஏராளமான பரிசு பொருட்களும் இருந்துள்ளன, அவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கண்டெய்னர் லாரியில் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள், தங்க நகைகளா அல்லது கவரிங் நகைகளா என்பது குறித்த ஆய்வும் நடைபெற்று வருகிறது. ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட அந்த நகை மற்றும் பரிசு பொருட்களை மதிப்பீடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான உத்தரவை ஆட்சியர் நடராஜன் பிறப்பித்தார்.