தமிழ்நாடு
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் எதிரொலி: துப்பாக்கி லைசன்ஸ் கேட்கும் இளம்பெண்கள்!
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்காரங்கள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இரண்டு மாணவிகள் தங்களை தற்காத்துக்கொள்ள துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணியை சந்தித்து மனு கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பெண்களை சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொண்டு, அன்பாக பேசி, அவர்களை நயவஞ்சகமாக அழைத்து பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக பிடித்து தொடர்ந்து மிரட்டி பாலியல் பலாத்காரம் மற்றும் பணம் பிடுங்குதல் போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களால் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். பலரும் இந்த கொடூர சம்பவத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் மாவட்ட ஆட்சியரை பார்த்து இரண்டு மாணவிகள் மனு ஒன்றை அளித்துள்ளனர். இந்த மனு மேலும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதில், பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பார்க்கும் போது, எங்களுக்கு அச்சமாக உள்ளது. இத்தனை நாட்களாக காவல்துறை இதை கண்டுகொள்ளாமல், அல்லது கண்டுபிடிக்காமல் இருந்துள்ளது. எனவே எங்களை நாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்துள்ளது. நாங்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு, எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அரசின் மீதும், காவல்துறையின் மீது நம்பிக்கையை இழந்து, தங்களை தற்காத்துக்கொள்ள துப்பாகி லைசன்ஸ் கேட்கும் நிலை இளம்பெண்களுக்கும், மாணவிகளுக்கும் வந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.