தமிழ்நாடு
விஜயகாந்த் பேசமாட்டார்; ஆனால் பிரச்சாரத்துக்கு வருவார்: உண்மையை உடைத்த சுதீஷ்!
மிக நீண்ட இழுபறி, அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் ஒருவழியாக விஜயகாந்தின் தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைந்தது. இந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்காக விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடுவார், பேச மாட்டார் என்று தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று தமிழகம் வந்த விஜயகாந்த் சிலமுறை கட்சி தலைமை அலுவலகம் வந்தார். கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு ஒருமுறை வந்தார். அப்போது செய்தியாளர்கள் விஜயகாந்திடம் கேள்வி எழுப்ப, தன்னால் பேச முடியாது என்று அவர் சைகை மூலமாக பதிலளித்தார்.
இந்நிலையில் தேமுதிக துணைச் செயலாளரும், விஜயகாந்தின் மைத்துனருமான சுதீஷ் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜயகாந்தி உடல்நிலை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். விஜயகாந்தின் உடல் நிலை எவ்வாறு உள்ளது? அவர் பிரச்சாரத்துக்கு வருவாரா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த சுதீஷ், விஜயகாந்த் நலமாக உள்ளார். அவர் பிரச்சாரத்திலும் கலந்துகொள்வார். பிரச்சாரத்தில் கலந்துகொண்டாலும் அவர் பேசமாட்டார். ஆனால் அவர் வந்தாலே போதும் என்று ஆதரவாளர்களும் வாக்காளர்களும் நினைக்கிறார்கள் என தெரிவித்தார். மேலும் கூட்டணி தொடர்பான கேள்விக்கு, அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்துள்ளதை இணக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறோம். கண்டிப்பாக 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.