தமிழ்நாடு
எங்களுக்கு சிக்கல்களை உருவாக்குகிறார்கள்: டிடிவி தினகரன் ஓப்பன் டாக்!
டிடிவி தினகரன் துணைப் பொதுச்செயலாளராக உள்ள அமமுக கட்சி ஆரம்பிக்கப்பட்டு முதல் ஆண்டு நிறைவடைந்து, இரண்டாம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதனையொட்டி செய்தியாளர்களை சந்தித்த தினகரன் அதிமுக தங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, கட்சிக் கொடியையும் ஏற்றிவைத்தார் தினகர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அவர்.
அப்போது குக்கர் சின்னம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், ஜெயலலிதாவின் தொண்டர்கள் 95 சதவிகிதம் பேர் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். மக்களும் எங்கள் பக்கம் உள்ளனர். இதனால் பயந்துபோய், எதிரிகளும் துரோகிகளும் தங்களுடைய அரசாங்க பலத்தை வைத்து இன்றுவரை எங்களுக்கு பல சிக்கல்களை உருவாக்கிவருகிறார்கள். இவைதான் எங்களை உரம்போட்டு வளர்த்துக்கொண்டிருக்கின்றன என்றார்.
மேலும், குக்கர் சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை 25-ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நிச்சயம் குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைக்கும். அமமுக வேட்பாளர்கள் அனைவரும் 26ஆம் தேதி மனு தாக்கல் செய்வார்கள். விரைவில் வேட்பாளர்களை அறிவிப்போம் என்றார். ஜெயலலிதாவை இழிவுபடுத்தியவர்களுடன் வீடு தேடிச்சென்று கூட்டணி அமைக்கிறார்கள். இதிலிருந்தே அதிமுக பலவீனமாக இருக்கிறது என்பது தெரியவில்லையா? என்றும் கேள்வி எழுப்பினார் தினகரன்.