தமிழ்நாடு
சார் வேண்டாமே… ராகுல் என அழையுங்கள்: ஆர்ப்பரித்த மாணவிகள் கூட்டம்!
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை புயல் வேகத்தில் தொடங்கிவிட்டனர். தமிழகத்தில் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் அதிமுக கூட்டணியில் தேசிய கட்சியான பாஜக உள்ளது. அதே நேரத்தில் திமுக கூட்டணியில் மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி உள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தமிழகம் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கூட்டணி கட்சிகளுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு வருகை தந்த ராகுல் காந்தி பெருந்திரளான மாணவிகள் கூட்டத்தில் உரையாடினார்.
மாணவிகள் மத்தியில் தனது உரையாடலை தொடங்கிய போது மாணவி ஒருவரை ராகுலை சார் என அழைத்து தனது கேள்வியை ஆரம்பிக்க முயன்றார். அப்போது குறுக்கிட்ட ராகுல் காந்தி, சார் என அழைக்க வேண்டாமே, அதற்கு பதிலாக ராகுல் என்றே கூப்பிடலாம். அதுதான் மிகவும் வசதியாக இருக்கும் என்றார். உடனே அங்கு குழுமியிருந்த மாணவர்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது.
இதனையடுத்து அந்த மாணவி சிறிது வெட்கத்துடனே ஹாய் ராகுல் என்றார். அப்பொழுதும் மாணவர்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. இதனையடுத்து அந்த மாணவி தனது கேள்வியின் இடையேயும் ராகுல் என கூறினார். அப்போதும் மாணவர்கள் ஆர்ப்பரித்தனர். இது ராகுல்காந்திக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது. சமூக வலைதளங்களிலும் இந்த காட்சி வைரலாக பரவுகிறது.