தமிழ்நாடு
8 மணி வரை சிறப்பு வகுப்பு: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்
பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பொதுமக்கள் பிடித்து, வகுப்பறையில் பூட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
உளுந்தூர்பேட்டைக்கு அருகில் உள்ள சிறுமதுரை அரசு உயர்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும் 10 வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதனால் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது.
அதில் கிருஷ்ணன் என்ற ஆசிரியர் மாணவிகளுக்கு இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்தியுள்ளார். அப்போது ஆசிரியர் கிருஷ்ணன் மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நேர்ந்ததை பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் ஊர் மக்களை திரட்டி பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் கிருஷ்ணனை தாக்கி வகுப்புக்குள் பூட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து வந்த காவல்துறையினர் ஆசிரியர் கிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.