தமிழ்நாடு
சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை: கொந்தளிக்கும் பாமக தலைவர் அன்புமணி!
தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவதையும், சந்துக் கடைகளில் டாஸ்மாக் மது விற்கப்படுவதையும் அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
கள்ளச் சாராயம் விற்பனை
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச் சாராயம் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. கள்ளச் சாராய வணிகர்கள் இடையே நிலவும் போட்டியால், ஒரு பாக்கெட் கள்ளச் சாராயம் வாங்கினால், இன்னொரு பாக்கெட் கள்ளச் சாராயம் இலவசம் மற்றும் இரு பாக்கெட் கள்ளச் சாராயம் வாங்கினால் ஒரு முட்டை இலவசம் என்றெல்லாம் சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக ஆங்கில இதழ் ஒன்று செய்தியை வெளியிட்டு உள்ளது. தடையின்றி கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை அளிக்கிறது.
அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மது இல்லா மாநிலம் தான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஆகும். மதுக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை கண்டுகொள்ளாத அரசு, பல புதிய வடிவங்களில் மது விற்பனையை அறிமுகம் செய்து வருவது கண்டனத்திற்கு உரியது. சந்துக் கடைகள் என்ற பெயரில் 24 மணி நேரமும் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்யப்படுகிறது.
இத்தகைய சூழலில், கள்ளச் சாராய விற்பனையையும் அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால், நம் நாடு விரைவில் சுடுகாடாக மாறி விடும். இதற்குக் காரணமானவர்களை தமிழ்நாடு அரசு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். டாஸ்மாக் மதுக் கடைகளை படிப்படியாக மூடி, முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.