இந்தியா
பழைய வழக்கில் சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன்!
![Satya Pal Malik - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/04/Satya-Pal-Malik.jpg)
முன்னாள் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இவர் சில தினங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் புல்வாமா தாக்குதல் குறித்து மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
![Satya pal malik and modi - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/04/Satya-pal-malik-and-modi-1.jpg)
#image_title
கடந்த 2019- ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மையின் காரணமாகவே புல்வாமா தாக்குதல் ஏற்பட்டது. ராணுவ வீரர்களை அழைத்துச் செல்ல உள்துறை அமைச்சகத்திடம் விமானம் கேட்கப்பட்டது. ஆனால், உள்துறை அமைச்சகம் விமானம் தர மறுத்து சாலை வழியாக செல்ல உத்தரவிட்டது.
![Pulwama attack - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/04/Pulwama-attack-1.jpg)
#image_title
சாலை வழியாக சென்றபோது வீரர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செய்யப்படவில்லை. அன்று மாலையே இது குறித்து பிரதமரிடம், இது நம் தவறு விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இது நடந்திருக்காது என தெரிவித்தேன். ஆனால் பிரதமர், வெளியில் யாரிடமும் இதனை கூற வேண்டாம், அமைதியாக இருக்கும்படி கூறினார். தேசிய பாதுகாப்பு செயலாளரும் அமைதியாக இருக்கும்படி கூறினார். வெடி மருந்துகளுடன் தீவிரவாதிகள் வந்த வாகனம் 10, 12 நாட்கள் சுற்றித் திரிந்ததை உளவுத்துறை சரியாக கவனிக்கவில்லை. இது உளவுத்துறையினர் தோல்வி என்ற அதிர்ச்சி தகவலை கூறினார்.
இந்நிலையில் தற்போது சத்யபால் மாலிக் நேரில் ஆஜராகும்படி சிபிஐ சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2018 முதல் 2019 வரை ஆளுநராக பதவி வகித்தபோது அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் நீர்மின் திட்டம் ஆகியவற்றில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இது குறித்து வழக்குப் பதிவு செய்த சிபிஐ, சத்யபால் மாலிக்கிடம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில் தற்போது அவரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. சத்யபால் மாலிக் பிரதமர் மோடிக்கு எதிராக புல்வாமா தாக்குதல் குறித்து பேசியதால் தான் அவரை மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.