தமிழ்நாடு
செய்தியாளர்களை புன்னகையுடன் சந்திப்பவரோடு கூட்டணி: வேல்முருகன் சூசகம்!
தினகரனுடன் இணைந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் சூசகமாக தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனின் அமமுக பெரிய அளவில் அரசியல் கட்சிகளுடன் எந்த கூட்டணியும் இதுவரை அமைக்கவில்லை. எஸ்டிபிஐ கட்சியுடன் மட்டும் தான் இதுவரை அதிகாரப்பூர்வு கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமமுக வரும் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு 38 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறிவருகிறார் டிடிவி தினகரன்.
தேர்தலுக்கு பின்னர் பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக அமமுக விளங்கும் என தெரிவித்து வருகிறார் டிடிவி தினகரன். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பத்திரிக்கையாளர்களை சிரித்த முகத்தோடு சந்திக்கிறவரோடு கூட்டணி அமைக்க உள்ளதாக கூறினார். கூட்டணி குறித்து முடிவெடுக்க எனக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தின் அடிப்படையில் இந்த முடிவெடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கையாளர்களை சிரித்த முகத்தோடு சந்திக்கிற தலைவர் டிடிவி தினகரன் தான் என்பது அனைவருக்கும் தெரியும். வேல்முருகன் இதனை கூறும் போது செய்தியாளர்கள் சிரித்து கைதட்டினர். கட்சியின் பேரவை கூட்டம் முடிந்த பின்னர் அதிகாரப்பூர்வமாக இதனை அறிவிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். நேற்றைய தினம் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை எதிர்கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், செய்தியாளர்களை சிரித்த முகத்தோடு எதிர்கொள்பவர் என தினகரனை வேல்முருகன் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.