தமிழ்நாடு
எங்களுக்கு மோடி தான் டாடி: அதிமுக அமைச்சரின் அளவில்லாத பாசம்!
தமிழகத்தில் பாஜக மக்களவை தேர்தலுக்காக அதிமுக உடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணி அமைவதற்கு முன்னரே அதிமுக அமைச்சர்கள் பாஜகவையும், பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் புகழ்ந்து தள்ளி வந்தார்கள். தற்போது கூட்டணி அமைந்துள்ள நிலையில் அவர்களின் புகழ்தலுக்கு அளவா வேண்டும் என்றாகிவிட்டது.
குறிப்பாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது ஒவ்வொரு பேட்டிகளின் போதும் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை புகழ்ந்துதள்ளி வருகிறார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மோடியை டாடி என புகழ்ந்துள்ளார்.
அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக உள்ளதுபோல், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியவில் உள்ள அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர். ஜெயலலிதா எனும் ஆளுமை கொண்ட அம்மா இல்லாமல் நாங்கள் தவித்து வருகிற இந்த நேரத்தில், பிரதமர் மோடிதான் எங்களுக்கு டாடியாக இருந்து வழிகாட்டுகிறார் என்றார்.
மேலும், இந்தியாவை மோடியே மீண்டும் ஆள வேண்டும். அதேபோல், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடரவேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.