சினிமா
குறைக்கப்பட்ட ‘பொன்னியின் செல்வன்2’- காரணம் இதுதான்!
‘பொன்னியின் செல்வன்2’ படத்தின் நீளம் முதல் பாகத்தை விட குறைக்கப்பட்டுள்ளது.
மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்து இருக்கக்கூடிய திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி ஐந்து பாகங்களாக எழுதிய இந்த வரலாற்றுப் புதினத்தை இயக்குநர் மணிரத்தினம் திரைக்கதையாக இரண்டு பாகங்களாக உருவாக்கினார். இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து படத்தின் இரண்டாம் பாகம் இந்த மாதம் இறுதியில் வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
சமீபத்தில் நடந்த இந்த இரண்டாம் பாகத்திற்கான இசை வெளியீட்டு விழாவும் ரசிகர்கள் மத்தியில் கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது. இப்பொழுது படம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. அதன்படி, ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்திற்கான நேரம் இரண்டு மணி நேரம் 37 நிமிடங்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் படம் சென்சார் ஆகி வெளியாகவில்லை. சென்சாருக்கு சென்றால் இதன் நீளம் இன்னும் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் 2 மணி நேரம் 47 நிமிடங்கள் இருந்தது. ‘கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் படம் இருப்பதால் மக்களுக்கு பார்ப்பதற்கு சோர்வாகி விடாதா?’ என அப்போது கேட்கப்பட்டது அதற்கு ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்கள் 3 மணி நேரம் வந்து பெரும் வெற்றியை பெற்றதை இயக்குநர் மணிரத்தினம் சுட்டிக்காட்டி இருந்தார். இருந்தாலும், இரண்டாம் பாகத்தின் நீளம் காரணமாக மக்களுக்கு சோர்வு ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே இரண்டு மணி நேரம் 27 நிமிடங்களாக உருவாக்கப்பட்டது எனவும் சென்சார் போர்ட் சென்றால் இன்னும் சில நிமிடங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது எனவும் சொல்லப்படுகிறது.