தமிழ்நாடு
பிரதமர் மோடிக்கு மு.க.அழகிரி வேண்டுகோள்: கலைஞர் பெயரை வையுங்கள்!
சென்ட்ரல் ரயில் முனையத்திற்கு, எம்ஜிஆர் பெயரை சூட்டியது போல், எழும்பூர் ரயில் முனையத்திற்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்ட பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் கலைஞர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி வேண்டுகோள் வைத்துள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி பிரதமர் மோடி நேற்று சென்னை வந்து கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு மு.க.அழகிரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மரியாதைக்கும், பெருமதிப்பிற்கும் உரிய பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு, சென்னை செண்டர்ல் ரயில் முணையத்திற்கு மறைந்த தமிழக முதல்வர் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் பெயரைச் சூட்டி பெருமை படுத்தியமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோல சென்னை எழும்பூர் ரயில் முனையத்திற்கு தமிழக மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பெயரை சூட்டிடவேண்டுமென எனது அன்புக் கோரிக்கையை தங்களிடம் வேண்டுகோளாக வைக்கக் கடமைப்பட்டுள்ளேன். என்றென்றும் கலைஞரின் தொண்டன் மு.க.அழகிரி. என அவர் தெரிவித்துள்ளார்.