கிரிக்கெட்
த்ரில்… பதற்றம்… அதிரடியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மோதியது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி அதிரடியாக 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை இந்த தொடரில் பதிவு செய்துள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணி அபாரமாக விளையாடியது. சென்னை அணியின் முதல் விக்கெட் 110-வது ரன்னில் தான் வீழ்ந்தது. அனைத்து வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது.
சென்னை அணியில் ருத்ராஜ் கெய்க்வாட் 57(31) ரன்களும் டெவன் கான்வே 47(29) ரன்களும் எடுத்தனர். இறுதி நேரத்தில் கேப்டன் தோனி அடித்த இரண்டு சிக்சஸர்களும் மைதானத்தையே அலற விட்டது. இதனையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலைய இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி சிறப்பான தொடக்கத்தை அமைத்துக்கொண்டது. 79 ரன்களுக்கு முதல் விக்கெட்டை அந்த அணி இழந்தது.
அந்த அணி சிறப்பாக விளையாடினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டையும் இழந்துகொண்டிருந்தது. இமாலைய இலக்கை நோக்கி சென்னை அணியை துரத்திக்கொண்டே இருந்தது. இதனால் சென்னை அணி வெற்றி பெறுமா என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. ஆட்டத்தின் இறுதி ஓவர்கள் த்ரில் உடனும் பதற்றத்துடனுமே நகர்ந்தன. கடைசியாக லக்னோ அணிக்கு 6 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணியால் 15 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
20 ஓவர் முடிவில் 205 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியை தழுவியது லக்னோ. அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 53 ரன்கள் எடுத்தார். சென்னை அணியின் மொயின் அலி 4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகன் விருது மொயின் அலிக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. முதல் ஆட்டத்தில் சென்னை அணி குஜராத் அணியிடம் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.