தமிழ்நாடு
பலியல் புகார்… தலைமறைவான கலாஷேத்ரா பேராசிரியர் கைது!
![Hari - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/04/Hari.jpg)
சென்னையில் கலாஷேத்ராவில் கடந்த சில ஆண்டுகளாக மாணவிகளுக்கு அங்குள்ள பேராசிரியர் மற்றும் நடன பயிற்சியாளர்களால் பாலியல் தொல்லை நடந்து வருவதாக அதிர்ச்சியளிக்கும் புகார் எழுந்தது. இதில் தலைமறைவாக இருந்த கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மனை தனிப்படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
![Kalakshetra - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/04/Kalakshetra-1024x683.jpg)
பாலியல் தொல்லை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், மத்திய அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் மின்னஞ்சல் வழியாக கடிதம் அனுப்பி நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர். இதில் பேராசிரியர்கள் ஹரிபத்மன், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் உள்ளிட்ட நான்கு பேர் மீது மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்தனர். இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.
இந்த சூழலில் கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி ஒருவர் சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பேராசிரியர் ஹரிபத்மன் மீது புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ஏப்ரல் 3-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஹரிபத்மனுக்கு மாநில மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த சூழலில் அவர் தலைமறைவானார்.
இதனையடுத்து தலைமறைவான ஹரிபத்மனை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர. இன்று காலை ஐதராபாத்தில் அவரை கைது செய்து அங்கு வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.