தமிழ்நாடு
டிடிவி தினகரன் அமைதியாக செய்யும் அதிரடி அரசியல்!
தமிழகத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் இன்னொரு கூட்டணியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு அணிகளுமே தங்கள் கூட்டணி தான் வெற்றிக்கூட்டணி, மெகா கூட்டணி என கூறி வருகிறது.
ஆனால் இந்த இரு கூட்டணிகளிலும் சேராமல், பெரிதாக கூட்டணி ஒன்றும் அமைக்காமல் 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது அமமுக. அதில் 37 தொகுதிகளில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என கூறிகின்றனர் அமமுக நிர்வாகிகள். எதன் அடிப்படையில் டிடிவி தினகரன் இப்படி கூறிவருகிறார் என்பதை ஆராய்ந்தால் அதன் பின்னணியில் அவரின் அமைதியான அதிரடி அரசியல் இருப்பது தெரியவரும்.
ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் டிடிவி தினகரன் அங்கு பலரை தனிப்பட்ட ரீதியாக சந்தித்து தேர்தலுக்கு ஆதரவை கோருகிறார். அதன்படி தென்மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் டிடிவி தினகரன் நேற்று கன்னியாகுமரிக்கு சென்றார். அதற்கு முந்தின நாள் நெல்லையில் சிஎஸ்ஐ ஆயரை சந்தித்து சிறுபான்மையினர் வாக்குகள் அமமுகவுக்கு வரவேண்டும் என்று அமமுக சார்பில் கோரிக்கை வைத்துள்ளார்.
பின்னர் கன்னியாகுமரிக்கு வந்த தினகரன், பகவதி அம்மன் திருக்கோயில், சாமித்தோப்பு வைகுண்டர் ஆலயத்தில் தரிசனம் செய்துவிட்டு குமரி கிறிஸ்துவ ஆயர்கள் மற்றும் முக்கியமான ஆன்மீகத் தலைவர்களை சந்தித்துப் பேசியுள்ளார். தினகரன் அமைதியாக இதுபோன்ற பல அதிரடி அரசியலில் ஈடுபட்டுள்ளதால் இந்த தேர்தலில் அவர் அதிமுக, திமுகவுக்கு டஃப் கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.