தமிழ்நாடு
வெற்றிப் பாதையில் பயணிக்கும் மாபெரும் கட்சி அதிமுக: ஈபிஎஸ் அதிரடிப் பேச்சு!
கடந்த வாரம் அதிமுகவின் பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இந்நிலையில், சென்னையில் இருந்து சேலம் செல்கின்ற வழியில் விழுப்புரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அன்போடு ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
வெற்றிப் பாதையில் அதிமுக
தி.மு.க.வின் ஆட்சியில் அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் அதிகமாக போடப்பட்டு வருகிறது. அந்த வழக்குகளை எல்லாம் நாங்கள் சட்ட ரீதியாக எதிர் கொள்வோம். பல்வேறு சோதனைகளையும் கடந்து வெற்றிப் பாதையில் பயணித்து வரும் ஒரு மாபெரும் கட்சி தான் அதிமுக. எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை வென்றெடுப்போம். ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மக்கள் பணியில் அதிமுக தொடர்ந்து எப்போதும் சேவையாற்றி வரும். அதிமுக-வை யார் சீண்டினாலும், இறுதியில் அவர்கள் தான் அழிந்து போவார்கள். அதிமுக-வை அழிக்க நினைத்தால் அது கானல் நீராகத் தான் இருக்கும்.
மீண்டும் ஆட்சியில் அதிமுக
அதிமுக மீண்டும் ஆட்சியில் அமரும். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்புகள் உள்ளது. இதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை. அதிமுக-விற்கு விரைவில் விடிவு காலம் பிறக்கும். அதிமுக-விற்கு ஒளிமயமான எதிர்காலம் நம் கண்ணுக்கு முன்னால் தெரிகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அனைவரும் பாடுபடுவோம் என ஈபிஎஸ் பேசினார்.