தமிழ்நாடு
ரோகினி தியேட்டரில் தீண்டாமை: மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!
ரோகினி தியேட்டரில் நரிக்குறவர் சமூக மக்களை படம் பார்க்க அனுமதிக்காத விவகாரத்தில் காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் தற்போது மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
நடிகர் சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பார்க்க ரோகினி தியேட்டரில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் டிக்கெட் எடுத்தும் தீண்டாமை கொடுமையால் அனுமதி மறுக்கப்பட்டனர். நேற்று சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவியது. இதனால் பலரும் தியேட்டர் நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து நரிக்குறவர் சமூகத்தினரை அனுமதிக்க மறுத்த காசாளர் ராமலிங்கம், காவலாளி குமரேசன் ஆகியோர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எதற்காக நரிக்குறவர் மக்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என்று மதுரவாயில் உதவி காவல் ஆணையர் ரமேஷ் பாபு முன்னிலையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் தலைமையில் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் சமூக மக்கள் மற்றும் திரையரங்க நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற உள்ளது.