தமிழ்நாடு
நாளை முதல் முகக்கவசம் கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், நோயாளிகள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் மாநில சுகாதார பேரவை 2023-ஐ தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் தொடங்கியுள்ளது. பல வகைகளில் இது உருமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. இதன் பாதிப்பில் இருந்து நம்மை காத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக வருபவர்கள், பார்வையாளர்கள், உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் என அனைவரும் 100 சதவீதம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அமல்படுத்த உள்ளோம். இதனை சுகாதாரத்துறை செயலாளர் அறிக்கையாக வெளியிடுவார் என கூறினார்.