சினிமா
‘பொன்னியின் செல்வன்1’: அதிர்ச்சி தகவல் சொன்ன பார்த்திபன்!
‘பொன்னியின் செல்வன்1’ குறித்து நடிகர் பார்த்திபன் சொன்னத் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இதற்காக சென்னையில் பிரமாண்டமான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த படத்தில் சின்ன பழுவேட்டையாராக நடித்திருக்க கூடிய நடிகர் பார்த்திபன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் பேசிய பொழுது சொல்லியிருக்கக்கூடிய தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் கூறியிருப்பதாவது,
“என்னைப்போல் அழகாக தமிழ் பேசுபவர்களுக்கு ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களில் வாய்ப்பு கிடைப்பது பெரிய விஷயம். அந்த சந்தோஷத்தில் நெஞ்சில் வாள் ஏந்தி வந்திருக்கிறேன். உங்களைப்போல நானும் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்காக காத்திருக்கிறேன்.
படத்தின் முதல் பாகம் எப்படியிருந்தது என எனக்குத் தெரியாது. ஏனெனில், முதல் பாகத்தையே நான் இன்னும் பார்க்கவேயில்லை. முதல் நாள் தஞ்சாவூரில் சென்று படம் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டு அங்கு சென்று ரசிகர்களுக்கு நடுவே மாட்டிக்கொண்டு படத்தை பார்க்க முடியாமல் போனது. ஆகவே, முதல் பாகத்தில் என்ன இருந்தது எனக்குத் தெரியாது. இரண்டாம் பாகத்தில் என்ன இருக்கும் எனவும் தெரியாது. ஆனா, இந்தப் படத்தில் நான் இருக்க வேண்டும் என்பது மட்டும் எனக்கு சந்தோஷம்.
முதல் பாகத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது போலவே, இரண்டாம் பாகத்திலும் கிடைக்கும் என நம்புகிறேன். எல்லா படங்களுக்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பது அவசியம். வரலாற்று படங்களுக்கு மட்டுமல்ல; சராசரி படங்களுக்கும் வரலாறு படைக்கும் அளவுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும்” என்று பேசியுள்ளார் பார்த்திபன்.