இந்தியா
மேற்கு வங்கத்தில் பரபரப்பு: மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி திடீர் தர்ணா போராட்டம்!
மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென மத்திய அரசுக்கு எதிராக இரண்டு நாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மேற்கு வங்கம் மாநிலத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
கொல்கத்தாவின் மத்திய பகுதியில் ரெட் ரோட்டில் உள்ள அம்பேத்காரின் சிலைக்கு முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்மாநில முதல்வர் பல்வேறு குற்றச்சாட்டுகளை மத்திய அரசுக்கு எதிராக வைத்துள்ளார். நிலுவையில் உள்ள எந்த தொகையையும் மேற்கு வங்கத்திற்கு வழங்காமல் பாரபட்சமாக மத்திய அரசு உள்ளது.
ஓபிசி மாணவர்களுக்கான உதவித்தொகை, இந்திரா ஆவாஸ் யோஜனா, சாலை மற்றும் வீட்டுவசதித்துறை நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. 100 நாள் வேலை திட்டத்திற்காக வர வேண்டிய 7000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்காமல் உள்ளது என முதல்வர் மம்தா தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். நாளை மாலை வரை இந்த தர்ணா போராட்டம் தொடரும் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மாநிலத்தின் முதல்வரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.