இந்தியா
போன் பே, கூகுள் பே பயன்படுத்தினால் கட்டணம்.. UPI குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
NPCI என அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில், யூபிஐ வழியாக ரூ.2,000க்கு மேல் செய்யப்படும் அனைத்து வணிக பரிவர்த்தனைகளுக்கும் ஏப்ரல் 1 முதல் கட்டணம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது. ரூ.2,000க்கு மேல் உள்ள அனைத்து வணிக பரிவர்த்தனைகளுக்கும் அடுத்த மாதம் முதல் 1.1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறியுள்ளதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் வணிக பரிவர்த்தனைகளுக்கு மட்டும் தான் இந்த கட்டணம் வென்றும் தனிநபர்கள் பரிமாற்றம் செய்து கொண்டால் கட்டணம் எதுவும் இல்லை என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் பரிவர்த்தனை காரணமாக தற்போது ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு குறைந்து வரும் நிலையில் ஏராளமான பொதுமக்கள் கூகுள் பே, போன் பே, உள்ளிட்ட செயலிகளின் மூலம் தான் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். பிளாட்பாரா கடையில் 10 ரூபாய்க்கு வாழைப்பழம் வாங்கினாலும் நகைக்கடையில் லட்சக்கணக்கில் பொருள் நகைகள் வாங்கினாலும் கூட ஆன்லைன் பரிவர்த்தனை தான் செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக பேடிஎம், கூகுள் பே, போன்பே ஆகிய பரிவர்த்தனைகளின் வசதிகள் கிராமப்புறங்களில் கூட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் யூபிஐ மூலம் ஆன்லைனில் ரூ2000க்கும் அதிகமான வணிகரீதிலான பண பரிமாற்றங்களுக்கு கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு அதன் பயனர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிறிய பரிவர்த்தனை செய்யும் வணிகர்களுக்கு இதில் பாதிப்பு இல்லை என்றாலும் ரூ.2000க்கும் அதிகமான தொகை பணப்பரிமாற்றம் செய்யப்பட்டால் 1.1% கட்டணம் என்பது வாடிக்கையாளர்களுக்கு பெரும் இழப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
மேலும் அரசு நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்ட், காப்பீடு , ரயில்வே டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட பண பரிமாற்றங்களுக்கு 1 சதவீதம் கட்டணம் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகளுக்கு 0.9 சதவீதம், தொலைதொடர்பு, அஞ்சலகம், கல்வி, வேளாண்மை, ரியல் எஸ்டேட் போன்ற பரிவர்த்தனைகளுக்கு 0.7 சதவீதம் கட்டணம் என்றும் கூறப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் போன்றவற்றுக்கு 0.5 சதவீதம் கட்டணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் இனி ஆன்லைன் பணப்பரிமாற்றம் குறையுமா? ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.