தமிழ்நாடு
உதயசூரியன் சின்னம்: மதிமுக, விசிகவுக்கு திமுக வைத்த செக்!
மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
பெரும் இழுபறிக்கு பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இரண்டு தொகுதிகள் கோரிக்கையை ஏற்ற திமுக தரப்பு அவர்களை உதயசூரியன் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல்கள் வருகின்றன. இன்று கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த திருமாவளவனிடம் சின்னம் குறித்து பத்திரிகையாள்ர்களின் கேள்வி எழுப்பின்னர்.
இதற்கு பதில் அளித்த அவர், ஏற்கனவே பல தேர்தல்களில் நாங்கள் தனிச் சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம். தற்போதுள்ள சூழலில் கூட்டணி நலன் கருதி எந்த சின்னத்தில் போட்டியிடுவது உகந்ததாக இருக்கும் என்பது தொடர்பாக நிர்வாகிகளுடன் கலந்துபேசி இரண்டொரு நாட்களில் அறிவிப்போம் என்றார்.
அதே நேரத்தில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபை உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. மதிமுகவில் கணேசமூர்த்திக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், வைகோவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் வழங்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது. அந்த ஒரு மக்களவை தொகுதியிலும் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என திமுக தரப்பு அறிவுத்தியதாக கூறப்படுகிறது.