இந்தியா
கூகுள் நேர்காணலில் வெற்றி, வீடு வாடகைக்கான நேர்காணலில் தோல்வி.. பெங்களூரு இளைஞரின் அனுபவம்..!
கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் தான் கூகுள் நேர்காணலில் கூட மிக எளிதாக வெற்றி பெற்றுவிட்டதாகவும் ஆனால் வாடகைக்கு வீடு கேட்டு வீட்டின் உரிமையாளரிடம் நேர்காணலுக்கு சென்றபோது அதில் தான் தோல்வி அடைந்துள்ளதாகவும் தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு பெங்களூரில் தற்போது வீடு வாடகைக்கு கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக உள்ளது என்றும், வீடு வாடகைக்கு கேட்க வருபவர்களிடம் வீட்டின் உரிமையாளர்கள் நேர்காணல் எடுத்து அதில் திருப்தி அடைந்தால் மட்டுமே வீட்டை வாடகைக்கு கொடுக்கின்றனர்.
சில முக்கிய பகுதிகளில் தற்போது 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மாத வாடகையாக வீட்டின் விலை உயர்ந்து விட்டது என்றும் அதற்கும் வீடு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள கூகுள் அலுவலகத்தில் பணிபுரிந்த இளைஞர் ஒருவர் பெங்களூருக்கு மாற்றலாகி வந்த நிலையில் அவர் பெங்களூரில் தங்குவதற்கு வீடு தேடினார். அப்போது அவர் வீட்டின் உரிமையாளரிடம் நேர்காணலுக்கு சென்றபோது அவர் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்க முடியாததால் நேர்காணலில் தோல்வி அடைந்தார்.
கூகுள் நேர்காணலில் கூட நான் மிக எளிதாக வெற்றி பெற்றுவிட்டேன் என்றும் ஆனால் வீட்டில் உரிமையாளர் கேட்ட கேள்விக்கு என்னால் சரியான பதிலை தர முடியவில்லை என்று கூறினார். மேலும் தான் கூகுளில் பணிபுரிகிறேன் என்று சொன்னதுமே அவர் இந்த வீட்டை உங்களுக்கு வாடகைக்கு கொடுக்க முடியாது என்று கூறிவிட்டதாகவும் ஏன் என்று கேட்டால் நீங்கள் கூகுளில் வேலை பார்ப்பதால் மிக விரைவில் சொந்த வீடு வாங்கி விடுவீர்கள் அதற்கு பிறகு நான் வேறு ஒரு வாடகைதாரரை தேட வேண்டும் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
கூகுளில் பணிபுரிவதால் இப்படி ஒரு பிரச்சனையா என்று அப்போதுதான் எனக்கு புரிந்தது என்று அவர் கூறியுள்ளார். உடனே அடுத்து அவர் வீட்டின் உரிமையாளர்கள் என்னென்ன கேள்விகள் கேட்பார்கள் என்று ஏற்கனவே தயார் செய்து அதற்கான பதிலையும் தயார் செய்து வைத்திருந்தேன் என்றும் தற்போது நான் மற்றொரு வீட்டு உரிமையாளரின் நேர்காணலில் வெற்றி பெற்றுள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் யாராவது வீடு வாடகைக்கு எடுக்க வேண்டும் என்று நினைத்தால் என்னிடம் ஆலோசனை கேட்கலாம் என்றும் அவர் கூறியிருப்பது நகைச்சுவை தன்மையாக உள்ளது.