டிவி
ப்ரீத்தி- கிஷோர் பதிலடி: “வயசு ஒரு விஷயமே இல்லை!
சின்னத்திரை நடிகர்கள் ப்ரீத்தி- கிஷோர் தங்கள் திருமணம் குறித்து மனம் திறந்துள்ளனர்.
சன் டிவியில் ‘வானத்தைப் போல’ சீரியலில் தற்பொழுது நடித்து வருபவர் சின்னத்திரை நடிகை ப்ரீத்தி. இவரும் ‘பசங்க’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் கிஷோரும் காதலித்து வருவதாக முன்பு செய்திகள் வெளியானது. அதை இருவரும் உறுதி செய்து தற்பொழுது இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களது திருமணம் இப்பொழுது பேசு பொருளாக மாறியுள்ளது. இதற்கு காரணம் பிரீத்தி நான்கு வயது பெரியவர் என்பதுதான். இது குறித்து ரசிகர்களிடையே இணையத்தில் பேச்சு எழுந்தது குறித்து இருவரும் விளக்கம் கொடுத்துள்ளனர்.
கிஷோர் பேசியிருப்பதாவது, “வயது என்பது வெறும் எண் மட்டும்தான். ப்ரீத்தி போன்ற ஒரு பெண் கிடைத்தால் யாராக இருந்தாலும் இதையெல்லாம் பார்க்க மாட்டார்கள். மகிழ்ச்சியோடு வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொள்வார்கள். நிச்சயம் நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள். மற்றபடி வயது என்பது எனக்கோ ப்ரீத்திக்கோ எங்கள் இருவரது குடும்பத்திற்குமோ எந்த பிரச்சனையும் இல்லை! திருமணத்தில் பெண் வயதில் பெரியவள் என்பது ஒரு மனநிலை தான். அதிலிருந்து வெளியேறலாம். இதில் அதிகம் யோசிக்க எதுவும் இல்லை. வாழ்க்கையில் இதெல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்
ப்ரீத்தியும் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார், “பேசுபவர்கள் பேசிக்கொண்டே தான் இருப்பார்கள். நாங்கள் இப்பொழுது மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொண்டோம்! எங்கள் வாழ்க்கையை நாங்கள் வாழ போகிறோம். அதனால் இதையெல்லாம் ஓரம் வைத்துவிட்டு நீங்களும் சந்தோஷமாக வாழ்த்துங்கள்” என்று ப்ரீத்தி கூறியுள்ளார்.