இந்தியா
மோடிக்கு வெட்கமே இல்லையா? ராகுல் காந்தி ஆவேசம்!
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையை தாண்டி தீவிரவாதிகள் முகாம்களை அழித்தது. எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியதால் இந்திய விமானப்படைக்கும், பாகிஸ்தான் விமானப்படைக்கும் நடந்த தாக்குதலில் இரு நாட்டு விமானங்களும் சுட்டுவீழ்த்தப்பட்டது.
இதில் இந்திய விமானி அபிநந்தன் தவறி பாகிஸ்தானில் விழுந்தார். பின்னர் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தன் 60 மணி நேரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற இந்தியா டுடே மாநாட்டில் பிரதமர் மோடி இந்த தாக்குதல் விவகாரத்தை அரசியல் ரீதியாக பேசினார்.
அப்போது, ரஃபேல் போர் விமானங்களில்லாமல் இந்த நாடு தவிக்கிறது. ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று ஒட்டுமொத்த நாடும் ஒரே குரலில் கேள்வியெழுப்புகிறது. சிலரின் சுயநலத்தாலும், ரஃபேல் பற்றிய அரசியலாலும் இந்நாடு தவிக்கிறது என கூறினார் மோடி.
பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் மோடியை கடுமையாக சாடியுள்ளார். அன்புள்ள பிரதமரே உங்களுக்கு வெட்கமே இல்லையா? நீங்கள் ரூ.30000 கோடியை கொள்ளையடித்து உங்கள் நண்பர் அனில் அம்பானிக்கு கொடுத்துவிட்டீர்கள். ரஃபேல் போர் விமானங்கள் தாமதமானதற்கு நீங்கள் மட்டுமே காரணம். உங்களால்தான் பழைய போர் விமானங்களை வைத்துக்கொண்டு அபிநந்தன் போன்ற துணிச்சலான பைலட்டுகள் தங்களது உயிரை பணயம் வைக்கின்றனர் என்று விளாசினார் ராகுல் காந்தி.