இந்தியா
டெல்லியில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்!
ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவின் டெல்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், காஷ்மீர், உத்தரபிரதேசம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடிய விடிய சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 10:17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவாகியுள்ளது. பாகிஸ்தானின் பெஷாவர், சர்சத்தா, லாகூர், ராவல்பிண்டி போன்ற பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. இந்த நில நடுக்கங்களால் ஆப்கானிஸ்தானில் 9 பேரும், பாகிஸ்தானில் 2 பேரும் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தியா, துர்க்மினிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்தியாவில் தலைநகர் டெல்லி மற்றும் வட மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.