தமிழ்நாடு
திமுக கூட்டணியில் பாரிவேந்தரின் ஐஜேகே கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!
இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் இன்று திமுகவின் அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி தொடர்பாக திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பாரிவேந்தர் திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதனையடுத்து ஏற்பட்ட தொகுதி உடன்பாட்டால் அவருக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு தனது ஆதரவை தெரிவித்த பாரிவேந்தர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகம் இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் ஒரு மாற்றம் தேவை, அது ஸ்டாலின் மூலம்தான் நடைபெறும். மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மைய அரசிடம் மொழிய திமுகவால் தான் முடியும் எனவே மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என கூறினார். மேலும் அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதால் அந்த கூட்டணியில் ஐஜேகேவால் தொடரமுடியாது என்றார்.
இந்நிலையில் இந்த சந்திப்பில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டதால் உடனடியாக இந்திய ஜனநாயக கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் உதயசூரியன் சின்னத்தில் பெரம்பலூரில் பாரிவேந்தர் போட்டியிட வாய்ப்புள்ளது.