தமிழ்நாடு
மத்திய அமைச்சராகும் கனிமொழி: கீதா ஜீவன் பரபரப்பு பேச்சு!
திமுக மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கனிமொழி வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்காகவே திமுக சார்பில் நடத்தப்பட்டு வரும் ஊராட்சி சபை கூட்டங்களில் கனிமொழிக்கு தூத்துக்குடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே திமுக சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டதில் சிறப்பு அழைப்பாளராக திமுக எம்எல்ஏ கீதாஜீவன் கலந்து கொண்டார். இதில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த கீதா ஜீவன், ஜிஎஸ்டி வரி விதிப்பு கொண்டு வந்த பின்னர் தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என தமிழக அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் உறுப்பினராக உள்ள அவர், ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சியமைக்கும்போது, அவர் மத்திய அமைச்சராககூட வரலாம் என்றார்.