தமிழ்நாடு
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு: மத்திய அரசு எச்சரிக்கை!
நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாகவும் அதில் தமிழகத்தில் மட்டும் ஏழு மாவட்டங்கள் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் இந்தியாவில் அதிகரித்து வருவதை அடுத்து மூன்றாவது அலை தோன்றி விட்டதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்கள் உள்பட மொத்தம் 37 மாவட்டங்களில் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத்துறை இணை செயலாளர் அகர்வால் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா குறைந்து வந்தாலும் 37 மாவட்டங்களில் மட்டும் அதிகரித்து வருவதாகவும் அதில் தமிழகத்தில் கோவை, சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை மற்றும் அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த 37 மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அளிக்கக்கூடிய விஷயம் என்றும் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் ஆகிய உருமாற்றம் பெற்ற வைரஸ்கள் தான் இந்த 37 மாவட்டங்களில் பரவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள 37 மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.