இந்தியா
‘5 முறை செல்போன் மாற்றிவிட்டேன்… ஒரு பயனும் இல்லை’- நொந்துகொள்ளும் பிரசாந்த் கிஷோர்
‘ஐந்து முறை செல்போனை மாற்றிவிட்டேன். ஆனாலும் ஹேக்கிங் செய்துவிடுகிறார்கள்’ என பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் குறித்துப் பேசியுள்ளார் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்.
அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமுகப் பணியாளர்கள் ஆகியோரது செல்போன்களை பெகாசஸ் என்னும் உளவு மென்பொருள் உளவு பார்த்துள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இந்த உளவு மென்பொருள் மூலம் பல முக்கியப் பிரபலங்களை உளவு பார்த்ததாக அரசின் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர், மம்தா பானர்ஜியின் உறவினர், பல பத்திரிகையாளர்கள் ஆகியோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து என்டிடிவி சேனலுக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், “இதுவரை 5 முறைக்கு மேலாக எனது செல்போனை மாற்றிவிட்டேன். ஆனாலும், ஹேக் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை செல்போனை மாற்றும் போது போனை யாராவது ஒட்டுகேட்டுக் கொண்டு இருப்பார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால், ஹேக் செய்வார்கள் என்பதை உணரவில்லை” எனக் கூறியுள்ளார்.