இந்தியா
470 விமானங்களை இயக்க 6500 பைலட்டுக்களை தேடும் ஏர் இந்தியா.. செம வேலைவாய்ப்பு..!
![air india1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/air-india1.jpg)
இந்திய அரசிடம் ஏர் இந்தியா நிறுவனம் இருக்கும்போது நஷ்டத்தில் இருந்த நிலையில் அதை டாடா நிறுவனம் வாங்கி தற்போது லாபகரமாக மாற்றியுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை மேலும் விரிவுபடுத்த 470 புதிய விமானங்களை வாங்க ஒப்பந்தம் அளித்துள்ளது என்பதும் இந்த ஒப்பந்தம் காரணமாக அமெரிக்கா பிரிட்டன் ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்தகட்டமாக இந்த 470 புதிய விமானங்களை இயக்குவதற்கு 6500க்கும் மேற்பட்ட விமானிகள் தேவைப்படுவதாகவும் எனவே விமானிகள் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு செம வேலை வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது.
தற்போது, ஏர் இந்தியா தனது 113 விமானங்களை இயக்குவதற்கு சுமார் 1,600 பைலட்டுகளை கொண்டுள்ளது. சமீபகாலங்களில், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக மிக நீண்ட தூர விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், தாமதமானதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகிய நிறுவனங்களில் தற்போது 850 விமானிகள் 54 விமானங்களை இயக்கி வருகின்றனர். அதேபோல் விஸ்டாராவில் 600 க்கும் மேற்பட்ட விமானிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து 220 விமானங்களை இயக்குவதற்கு 3,000க்கும் மேற்பட்ட விமானிகளைக் கொண்டுள்ளன.
இந்த நிலையில் ஏர்பஸ் மற்றும் போயிங் விமானங்கள் புதியதாக ஆர்டர் செய்திருக்கும் நிலையில் ஒரு போயிங் விமானத்திற்கு 26 பைலட்டுகள் தேவை என்றும், 10 போயிங் விமானங்களை அறிமுகப்படுத்தினால், அதற்கு 260 விமானிகள் தேவைப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் ஏர் பஸ் ஏ 320 விமானத்திற்கு 12 பைலட்டுகள் தேவை என்றும் தெரிகிறது.
புதியதாக ஆர்டர் கொடுக்கப்பட்ட விமானங்கள் நாளையே வரப்போவதில்லை என்றாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்போயிங் மற்றும் ஏர்பஸ் விமானங்களை இயக்க சுமார் 6500 என்ற தேவையான எண்ணிக்கையிலான விமானிகள் தேவை என்றும், அவர்களை பயிற்சி மூலம் உருவாக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.