கிரிக்கெட்

450 விக்கெட்டுகள்: அஷ்வின் செய்த அபார சாதனை! முதல் நாள் முடிவில் இந்தியா: 77/1

Published

on

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை எடுத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 450 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

#image_title

பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் வந்த வேகத்திலேயே வெளியேறினர். இதனையடுத்து திணறிய ஆஸ்திரேலிய அணியை ஸ்மித்தும், லபுஷேனும் சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய லபுஷேன் 49 ரன்கள் , ஸ்மித் 37 ரன்கள் எடுத்து ஜடேஜாவின் சுழலில் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய மேட் ரென்ஷாவும் வந்த வேகத்தில் ஜடேஜா பந்துவீச்சில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் அலெக்ஸ் கேரி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க கடுமையாக போராடியது. சிறப்பாக விளையாடிய இவர்களை ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் வெளியேற்றினர்.

இதில் அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை எடுத்து சர்வதேச அரங்கில் தனது 450-வது டெஸ்ட் விக்கெட்டை பதிவு செய்தார் அஷ்வின். இந்த சாதனையில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் முதல் இடத்தில் உள்ளார். அவர் வெறும் 80 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்தார். அதே வேளையில் 450 விக்கெட்டுகளை வேகமாக எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அஷ்வின் பெற்றுள்ளார்.

இதனையடுத்து களமிறங்கிய யாரும் இந்திய சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நடையை கட்டினர். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 63.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை சரணடைய வைத்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 77 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. கே.எல்.ராகுல் 20 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்துள்ளார். கேப்டன் ரோகித் ஷர்மா 56 ரன்களுடனும், அஷ்வின் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

Trending

Exit mobile version